Skip to main content

கடவுள்..

மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..

'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்..

குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..

மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..

ரொம்ப உயரம் போலவே...
ஏற முடியுமா என்னால்...

மலையைச் சுற்றிலும் பல வழிகள்..
மேலே போவதற்கு...

அமைதியான வழி..
ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..
சாஸ்திர வழி...
சம்பிரதாய வழி..
மந்திர வழி..
தந்திர வழி..
கட்டண வழி..
கடின வழி...
சுலப வழி...
குறுக்கு வழி..
துரித வழி...
சிபாரிசு வழி...
பொது வழி..
பழைய வழி..
புதிய வழி..

இன்னும்...இன்னும்...கணக்கிலடங்கா...

அடேயப்பா....எத்தனை வழிகள்...

ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..

கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..

'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை...'
ஒதுக்கினர் சிலர்..

'நான் கூட்டிப் போகிறேன் வா...
கட்டணம் தேவையில்லை..
என் வழியி்ல் ஏறினால் போதும்..
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு...'
என கை பிடித்து இழுத்தனர் சிலர்...

'மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்
உனக்குப்பதில் நான் போகிறேன்..
கட்டணம் மட்டும் செலுத்து'...
என சிலர்..

'பார்க்கணும் அவ்ளோதானே...
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்..
அது போதும்.....
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்...'
ஆணவ அதிகாரத்துடன் சிலர்....

'அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது..
உன்னால் ஏறமுடியாது...
தூரம் அதிகம்.. திரும்பிப்போ...
அவரை என்னத்துக்குப் பார்க்கணும்..
பார்த்து ஆகப்போறது என்ன..'
அதைரியப்படுத்தினர் சிலர்...

'உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை..
ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்
அது ஒரு வழிப்பாதை...
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது...அப்படியே போவேண்டியதுதான்...'
பயமுறுத்தினர் சிலர்...

'சாமியாவது...பூதமாவது..
அது வெறும் கல்..
அங்கே ஒன்றும் இல்லை..
வெட்டி வேலை...
போய் பிழைப்பைப் பார்...'
பாதையை அடைத்து வைத்துப்
பகுத்தறிவு பேசினர் சிலர்...

என்ன செய்வது...
ஏறுவதா...
திருப்பிப் போவதா...

குழம்பி நின்ற என்னிடம்
கை நீட்டியது.. ஒரு பசித்த வயிறு..

கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்தக் கையில் வைத்தேன்..

'மவராசியா இரு...'

வாழ்த்திய முகத்தினைப் பார்த்தேன்..

நன்றியுடன் எனை நோக்கிய
அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து
புன்னகைத்தார் கடவுள்..!!!!

'இங்கென்ன செய்கிறீர்..!!'

* "நான் இங்கேதானே இருக்கிறேன்..."*

'அப்போ அங்கிருப்பது யார்..?'
மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்..

* "ம்ம்ம்...அங்கேயும் இருக்கிறேன்...
எங்கேயும் இருப்பவனல்லவா நான்!
இங்கே எனைக் காண முடியாதவர்
அங்கே வருகிறார்...
சிரமப்பட்டு!!!!..."*

'ஆனால்'..திணறினேன்...
'இது உமது உருவமல்லவே...'

* "அதுவும் எனது உருவமல்லவே...
எனக்கென்று தனி உருவமில்லை..
நீ என்னை எதில் காண்கிறாயோ
அது நானாவேன்..."*

'அப்படியென்றால்..??'

* "வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே....

பசித்த வயிற்றோடு கைநீட்டியவன்,
உணவளித்த உன் கண்களில்
காண்பதும் எனையே..

தருபவனும் நானே...
பெறுபவனும் நானே...

நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்...
என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை..
மனதுதான் வேண்டும்..." *

'அப்போ உனைப் பார்க்க
மலை ஏற வேண்டாம் என்கிறாயா??'..
குழப்பத்துடன் கேட்டேன்..

* "தாராளமாக ஏறி வா...
அது உன் விருப்பம்...
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே..
அங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்.." *

'கடவுளே'...விழித்தேன்...
'எனக்குப் புரியவில்லை...'

* "புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல...

*உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்..*
*என்னைக் காண,  நீ சிரமப்பட்டு மலையேறி உச்சிக்கு வரவேண்டும்...*

*பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்...*
*நீ இருக்குமிடத்திலேயே என்னைக் காண்பாய்.*

*ஏனெனில் நான் ஒருபோதும் உன்னை விட்டு விலகுவதுமில்லை!!*
*உன்னைக் கை விடுவதுமில்லை!!!"*

புன்னகைத்தார் கடவுள்!
வாழ்க வளமுடன்..

Comments

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...