Skip to main content

ஒரு தந்தை மகளின் உரையாடல்..

அவர் சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார் “குளிர் காலம் பாருங்க, இருட்டா இருக்குன்னு பொண்ணோட ஸ்கூல் பஸ் வர்ற இடம் வரைக்கும் நான் காலையிலே துணைக்குப் போறேன். அப்போ நாங்க தனியா எங்களுக்குள்ள பேசிக்குவோம்.
அவ, ஒரு வாரம் முன்னாடி இப்படி ஒரு காலை நடையில் , “அப்பா , ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?”
“மாட்டேன், தாராளமாச் சொல்லு”
”அந்த 304-ல இருக்கானே,ராகுல் ? அவன் என்னப் பாத்து சிரிக்கிறான்”
“சரி” என்றேன் கொஞ்சம் எச்சரிக்கையாக.
அவனுக்கு இவளை விட ஒரு வயசு கூட இருக்கும். 12ம் வகுப்பு.
”முதல்ல அந்த பையன்கிட்ட ஒழுங்காத்தான்பா பேசிட்டிருந்தேன். நாலுநாள் முன்னாடி, திடீர்னு அவன் ‘நீ எனக்கு ஸ்பெஷல் ப்ரெண்டு’னு சொன்னான்.”
“நீ என்ன சொன்னே?”
“ம்ம். .. நானும்..  Shut Up-னு முதல்ல சொல்லிட்டேன். ஆனா, அவனைப் பாக்கறப்போ என்னமோ ஒரு மாதிரி படபடன்னு வருதுப்பா. “
நான் மவுனமாக இருந்தேன்.
“இது தப்பாப்பா? எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு. நான் தப்பு பண்றேனோ?”
நான் இன்னும் அமைதியாக நடந்தேன்.
“அப்பா” என்றாள். பெண் குரல் உடைந்து, ரோடு என்றும் பார்க்காமல் திரும்பி, என் கைகளைப் பிடித்துக்கொண்டு “சாரிப்பா, நான் தப்பா ஏதேனும் சொல்லிட்டேனோ? சாரி..  சாரி” என்று அழுதாள்.
“இல்லேம்மா., நினைச்சுப் பார்த்தேன். நீ ஒன்ணாங் கிளாஸ்ல படிக்கும்போது ஸ்கூல்ல Classலயே உச்சா போயிட்டே. ஸ்கர்ட் எல்லாம் நனைஞ்சு .. It was a mess you know?.
அந்த வயசுக் குழந்தைக்கு இயற்கை உபாதையை அடக்கத் தெரியாது. இப்ப நீ எவ்வளவு பெரிய, பொறுப்பான பெண்ணாயிட்டன்னு நினைக்கறப்போ பெருமையா இருக்கு”
“அப்பா?” என்றாள். அவள் குழம்பிப்போய்......
இதுக்கும், அவள் சொன்னதுக்கும் என்ன தொடர்பு?ன்னு நினைச்சிருக்கலாம்.அப்பா சொன்னார்,
“இப்போ கிளாஸ்ல இருக்கறப்போ பாத்ரூம் வந்ததுன்னு வைச்சுக்கோ.
அது இயற்கைன்னு க்ளாஸ்லேயே போயிட முடியுமா? “
“சீ. ச்சீய்” என்றாள் அவள்
வெட்கமாக,
“கிளாஸ் முடியறவரை அடக்கி வைச்சிருந்து, இண்டெர்வெல்ல ஓடிப்போறேல்ல? அதுமாதிரிதான். இந்த பையன் பத்தின உணர்ச்சியெல்லாம், இயற்கையோட வேலை.
நாம படிக்கறப்போ இதைத் தவிர்த்திடணும். அப்புறம் காலம் வரும்ப்போது அது பாட்டுக்கு நடக்கும்.”
அவள் கலங்கிய கண்களோடு ஒரு நிம்மதியுடன் என்னைப் பார்த்தாள்.
“So, இனிமே அந்தப் பையனைப் பார்த்தா பாத்ரூம்னு ஞாபகம் வரும் இல்லையா?”
“உவ்வே” என்றாள் போலியாக வாந்தி எடுப்பதாகக் காட்டி. பஸ் திருப்பத்தில் வந்திருந்தது.
எப்படி ஒரு நாசூக்கான விஷயத்தை, ”நாயே, அதுக்குள்ள காதல் கேக்குதோ?” என்றெல்லாம் பொங்காமல், மிக அமைதியாக ஒரு பொறுப்புணர்வுடன் கையாண்டு இருக்கிறார்? அவருடைய அப்பா.
வளர்ப்பதில் நாமும் வளர்கிறோம்...
பொறுப்பு தெரிந்திருந்ததால்.....  

Comments

Post a Comment